தமிழ் தேசியம் : ஒரு வறட்டு (தேசிய)வாதம்http://blog.tamilsasi.com/2007/07/tamil-nationalism-in-tamil-nadu.htmlசசி:
பதிவின் பலவிதயங்களோடு ஒத்துப்போனாலும் குறிப்பிடவிரும்பியவைகள் சில.
1. பதிவின் தலைப்பு. இது தமிழ் தேசியம் குறித்த ஒன்றைப்பார்வையை மட்டும் குறிப்பிடுவதாக அமைந்துவிட்டது. ஒரு வறட்டு தேசிய வாதமாக ஒருசில நிலைகளில் இருந்தாலும், தமிழ் தேசியவாதம் பல தளங்களைக் கொண்டது. தலைப்பு இதைக் குறிப்பதாக இல்லை. (அதே போன்று முன்பு குறிப்பிட விரும்பியது, அப்துல் கலாம் பற்றிய பதிவில், அ.க இந்திய தேசியவாதத்தின் முகமூடி என்பதற்குப் பதிலாக இந்துத்துவ தேசியவாதத்தின் முகமூடி என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் என்று நினைத்தேன்)
2. மொழிவழி தேசியங்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் என்றுமே உள்ளுறைந்து கிடப்பவை. இதற்கு மாற்றான அல்லது மறுதலிப்பான (ஒரே இந்தியக்) கலாச்சார தேசியத்தினை கூர்மையாக மறுத்தும், முரண்பட்டும், எதிர்த்தும், அரிதாகச் சில சமயங்களில் உடன்பட்டும் அவைகள் செயல்பட்டு வந்தன; வருகின்றன.
2. தமிழ்தேசியம் மட்டுமல்ல மற்ற எல்லா மொழிவழித் தேசியங்களும் செழிப்பாகவும், வளமாகவும் இருக்கும்வரையில் தான் இந்திய ஒன்றியம் பன்முகத் தன்மை கொண்டதாகவும், உண்மையான மக்களாட்ட்சியாகவும் இருக்கும். இதற்கு எதிரான போக்குகள் வலுக்கும் போது பத்ரி குறிப்பிட்டது போல மொழிவழி தேசியங்கள் தங்களை உறுதிப்படுத்திகொள்ளவேண்டிய, கட்டமைக்கப்படவேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்தும் உள்ளது.
3. இன்றைய நிலையில் இந்திய ஒன்றியத்தில் தனிதமிழ்நாடு என்ற அரசியல் அமைப்பும் வேண்டுமானால் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ்தேசியம் என்பதான அரசியல், கூட்டமைப்பில் அவசியமானதாகவே இருக்கிறது. நதிநீர் பங்களிப்பு, வனச்செல்வங்களைப் பாதுகாத்தல், மக்களில் மொழியில் உச்சபட்ச சிவில் உரிமைகளை வழங்க துணைநின்றல், தமது தேசிய வரலாற்றை கட்டமைப்பு செய்தல், அதைப் பாதுகாத்தல், தமது புவியியல் பரப்பை தக்கவைத்துக்கொள்ளுதல், தமது மக்களுக்குத் தேவையான நியாயமான பங்கீட்டை அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளங்களில் கோரிப்பெறுதல் போன்றவைகள் திறமையாக நடைபெற்று அதிகாரமும், பலனும் கூட்டமைப்பில் சரியாகப் பகிரப்பட மொழிவழி தேசியங்கள் வலுவாக இருத்தல் அவசியம்.
4. இதையெல்லாம் விட மொழிவழி தேசியத்துக்கு (தமிழ்தேசியத்துக்கு) இன்னொரு முக்கியமான தேவை இருக்கிறது. இன்று இந்திய தேசிய முகமூடியில் திரண்டுவரும் ஒற்றைத் தன்மை கொண்ட மக்கள் விரோத இந்துத்துவ பயங்கரவாதத்தையும் அதனை முன் வைத்து வேர்பிடிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்கொள்ள மொழிவழி தேசியவாதம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.
5. சாதிப்பிரிவுகள், சுரண்டல், வர்க்க, பாலடிப்படையிலான சுரண்டகளை தன்னுடைய தேசியத்துக்குள் எதிர்கொள்ள வேண்டிய தேவையும், அதை ஒழிக்க வேண்டிய தேவையும் எல்லா மொழிவழி தேசியங்களுக்கும் உள்ளது; ஒவ்வொன்றும் தமக்கே உரிய வழிகளில் அத்தகைய செயல்பாடுகளில் இறங்கிக்கொண்டே உள்ளன.
6. இன்னும் ஒரு பார்வையில் தமிழ் தேசியம் என்ற பார்வையை தலித் விடுதலைக்கும், பெண்விடுதலைக்கும் கூட அகலப்படுத்துவதற்கு ஏதுவான கூறுகளையும், வளங்களையும் மொழி என்ற அளவிலும் அரசியல் என்ற அளவிலும் தமிழ் தன்னுள் கொண்டே இருக்கிறது. தமிழை வேராகக் கொண்ட கலக முயற்சிகள் பழங்காலந்தொட்டே தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் வலுப்படுத்தப்படவேண்டும்.
7. பெரியாரின் தேசியம் பற்றிய கருத்துக்களைக் குறிப்பிட்ட நீங்கள் 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற அவரது கருத்தையும் இணையாக கொண்டு வந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏனெனில் இரண்டும் எதிரெதிரானவை அல்ல.
8. சுருக்கமாகச் சொன்னால் தனிஅரசாக செயல்பட வேண்டிய தேவை இல்லாவிட்டாலும், தமிழ்தேசியத்துக்கு தற்போது அனேக வேறு தேவைகள் இருக்கின்றன.
நன்றி!